Pages

திங்கள், 28 மார்ச், 2011

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 07:35.44 மு.ப GMT ]
ஜப்பானில் 6.5 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஜப்பானில் கடந்த 11 ந் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 27 ஆயிரம் பேர் பலியானார்கள். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகள் வெடித்து சிதறின. எனவே அதில் அணு கதிரியக்கம் கசிய தொடங்கியது.
பால், குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இடிபாடுகள் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.23 மணியளவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹான்ஷீ நகரில் பூமி குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்து ஆட்டம் கண்டன. இதனால் பதறிய மக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது என அச்சம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹான்ஷீ கடலில் வழக்கத்தைவிட சுமார் 1.6 அடி அதாவது 1/2 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக அலைகள் எழும்பியது. இதை தொடர்ந்து அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானுக்கு மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவில் புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 5.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஏற்படும்  நிலநடுக்கத்தால் ஜப்பான் மக்கள் பீதியில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது