Pages

புதன், 16 மார்ச், 2011


 

3ஆம்  அணு உலை வெடித்தது: ஜப்பானில் அச்சம்

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில், நேற்று காலையில் மூன்றாம் எண் அணு உலை வெடித்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் எண் அணு உலையில், "கோர்' எனப்படும் யுரேனியக் கம்பிகள் உருகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஜப்பான் மிக மோசமான அணு கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புக்குஷிமா டாய் இச்சியில் ஆறு உலைகளும், டாய் இனியில் நான்கு உலைகளும் செயல்படுகின்றன. டாய் இச்சியில் ஒன்றாம் எண் அணு உலை, கடந்த 12ம் தேதி வெடித்தது. அதையடுத்து, மூன்றாம் எண் அணு உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன.தொடர்ந்து, உலையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக, போரிக் அமிலம் கலந்த கடல் நீர் அதிகளவில் உலைக்குள் செலுத்தப்பட்டது. ஆனால், நீர் செலுத்தப்படும் வேகத்தை விட வெப்பம் பல மடங்கு வேகமாக அதிகரித்தது. இதனால், உலை எந்நேரமும் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.நேற்று காலை ஜப்பான் நேரப்படி 11 மணியளவில், உலையின் வெளிப்புறச் சுவர் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மற்ற 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சரவை தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ, "அணு உலை மற்றும் அதன் உட்புற சுற்றுச்சுவர் ஆகியவை எவ்வித சேதமும் அடையவில்லை. காற்றில் கலந்த கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது' என்று தெரிவித்தார்.

அதேநேரம், காற்றின் திசையால், கதிர்வீச்சு, புக்குஷிமாவுக்கு வடக்கில் உள்ள ஒனகாவா அணு மின் நிலையம் வரை பரவியது. இதனால், ஒனகாவா நிலையத்தில் அணு மின் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புக்குஷிமாவில் இருந்து 160 கி.மீ., தொலைவு வரை கதிர்வீச்சு கசிந்திருப்பது கண்டறியப்பட்டது.இந்த அணு உலை வெடிப்புகளால் ஏற்படும் பாதிப்பு எந்தளவில் இருக்கும் என்பது குறித்து, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய அணுசக்தி நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.ஆபத்தில் இரண்டாம் எண் அணு உலை: இதற்கிடையில், டாய் இச்சியின் இரண்டாம் எண் அணு உலையில் நேற்று குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதனால், உலையில் வெப்பம் அதிகரித்து, "கோர்' கம்பிகள் பாதிக்கு மேல் உருகியதாகத் தகவல்கள் வெளியாயின.

வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, வெளியில் இருந்து நீர் உள்ளே செலுத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இரண்டாம் எண் அணு உலைக்கான நிபுணர்கள், ""கோர்' கம்பிகள் உருகின என்ற செய்தியைப் புறக்கணிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த இரண்டு வெடிப்புகளில், அணு உலையில் வெப்பம் அதிகரித்ததால், ஹைட்ரஜன் வாயு உருவாகி, அது வெளியில் உள்ள இரண்டாம் நிலை சுற்றுச்சுவரை தகர்த்து வெளியே வந்திருக்கிறது.இச்சம்பவத்தில், முதல் நிலைச் சுற்றுச்சுவர் சேதம் அடையவில்லை.ஆனால், இரண்டாம் எண் உலையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும், "கோர்' கம்பி எனப்படும் அணு மின் உற்பத்திக்கான மூலப்பொருள் உருகி விழும் நிகழ்ச்சி, மிகப் பெரும் விபரீதத்தையும். நீண்ட காலத்துக்கு மோசமான விளைவையும் ஏற்படுத்தும்.இரு உலைகளில் இருந்து கதிர்வீச்சு கலந்த நீர் மற்றும் நீராவி வெளியேற்றம் பல மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்குமென, ஜப்பானிய, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் கருதுகின்றனர்.

பீதியில் உலக நாடுகள்: இதுவரை மின்சார உற்பத்திக்கு அணு மின் உலை கட்டுமானத்தைப் பரிந்துரை செய்த நாடுகள் எல்லாம் இப்போது ஜப்பானில் அணு மின் உலையின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை அடுத்து பீதியில் ஆழ்ந்துள்ளன. பின்லாந்து நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து அணு மின் உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. மிக விரைவில் அடுத்த அணு மின் உலை ஒன்று நிறுவத் திட்டமிட்டிருந்த சுவிட்சர்லாந்து, அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தன் பகுதியில் அணு கதிர்வீச்சு அபாயம் வராமல் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.



2ஆம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு! 3 ஆவது நாளாக மீண்டும் உலுக்கிய பூகம்பம்.
ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.


சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது.இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.


தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர். பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.


நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.

இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட் டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது. ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது.





அமெரிக்காவின் மேற்குக் கரையோரப் பகுதியில் சுனாமி தாக்குதல்.

ஜப்பானிய நிலநடுக்க அனர்தத்தின் பின் அமெரிக்காவின் மேற்குப் புறத்திலும் சுனாமி அலைகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.கலிபோர்னியா மாநிலத்தின் கிரஸ்கண்ட் நகரில் இரண்டு மீற்றர்கள் உயரம் வரை சுனாமி அலைகள் உருவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுனாமி அனர்த்தம் ஏற்பட முன்பே அங்கிருந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டிருந்ததனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.ஆயினும் கட்டிடங்கள் மற்றும் மரங்கள் சிற்சிறு சேதங்களுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சுனாமி தாக்கத்தை எதிர்பார்த்து அமெரிக்காவின் மேற்குக் கரையோர நகரங்கள் பலவற்றில் மக்கள் முன்னெச்சரிக்கையாக நகர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
tahnks for nathiyalai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது