Pages

திங்கள், 14 மார்ச், 2011

ஜப்பான் புகுஷிமா அணுஉலையில் மீண்டும் வெடிப்பு.




ஜப்பான் புகுஷிமா அணுஉலையில் மீண்டும் வெடிப்பு.


டோக்கியோ: ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் மீண்டும் வெடித்தது. கடந்த 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பெரும் சேதத்தினால் ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புகுஷிமா பகுதியில் உள் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது.



இதில் குளிரூட்டும் இயக்கக கருவி பழுதடைந்தது இதன் காரணமாக அணு உலையில் உள்ள ஒரு ஒன்றாம் நம்பர் கருவி வெடித்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் 3 ம் நம்பர் பிளான்ட் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்த வெடிப்பின் காரணமாக ஹைட்ரஜன் வாயு பரவி வருவதாக தெரிகிறது.இதனால், இரண்டு லட்சம் மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கதிர்வீச்சில் ஒருவர் பலியாகியுள்ளார். 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் மூன்று அணு மின் உலைகளில், குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் புக்குஷிமா மாகாணத்தில், புக்குஷிமா டாய் இச்சி மற்றும் டாய் இனி என இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. இவற்றில், டாய் இச்சியில் ஆறு அணு மின் உலைகளும், டாய் இனியில், நான்கு உலைகளும் இயங்குகின்றன.இந்த 10 அணு மின் உலைகள் உட்பட ஜப்பானின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள 55 உலைகள் மூலம் நாட்டுக்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முதல் அணுமின் உலை வெடிப்பு:கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தின் அனைத்து உலைகளும் தாமாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டன. ஒன்றாம் எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்ததால், வெப்பம் அதிகரித்தது.அதனால், பீதிக்குள்ளான அதிகாரிகள், கடல் நீரை உட்புறம் செலுத்திக் குளிர்விக்க முயன்றனர். எனினும் அம்முயற்சி பலனளிக்காமல், நேற்று முன்தினம் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. உலையின் உட்புறத்தில், அணுக்கரு பிளப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் சீசியம் - 137 மற்றும் ஐயோடின் - 131 ஆகிய தனிமங்கள் கிடந்தது கண்டறியப்பட்டது.மேலும், அணுக் கழிவு கலந்த நீர் வெளியேறியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்ற கருத்தில், அணுமின் நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., வட்டாரத்தில் வசித்த 45 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.இச்சம்பவத்தில் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியானார். மேலும் மூன்று பேருக்கு கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அபாயத்தில் இன்னொரு உலை: இந்நிலையில், மூன்றாம் எண் உலையில், நேற்று அதிகாலை முதல், திடீரென குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து, உலைக்குள் வெப்பம் அதிகரித்து விடாமல் இருக்க போரிக் அமிலம் கலந்த கடல்நீர் உலைக்குள் செலுத்தப்பட்டது.பொதுவாக அணு உலை நிறுத்தம் தானியங்கி நடைமுறையாகும். ஆனால் அதிலிருந்து அணுக்கசிவு ஏற்படாதவரை அபாயமில்லை. அதே சமயம் அளவுக்கதிக வெப்பத்துடன் இருக்கும் அணு உலையை குளிரூட்டுவது சுலபமானதல்ல. உலைக்குள் வெப்பம் அதிகரிக்கும். அதனால் அழுத்தமும் அதிகரிக்கும். உலையின் வெளிப்புற கொள்கலச் சுவர் இந்த அதிக அழுத்தத்தால், வெடித்து விடும். இதுதான் ஒன்றாம் எண் அணு உலை வெடிப்பில் நிகழ்ந்தது.

இதைத் தடுப்பதற்காக, உலைக்குள் அதிகரித்து வரும் அழுத்தத்தை வால்வுகளை திறந்து வெளியேற்ற அதிகாரிகள் முயன்றனர். அதை வெளியேற்றுவதிலும் அளவு இருக்கிறது. இல்லை எனில் அதிக அளவு அணுக்கதிர் நச்சு பரவி பலரையும் பாதிக்கும். அம்முயற்சி வெற்றி பெற்றதா என்பது பற்றிய தகவல்கள் வரவில்லை.இந்த அணுமின் உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம்(டெப்கோ), வெளியிட்ட அறிக்கையில், "நிலையத்தைச் சுற்றிப் பரவியுள்ள கதிர்வீச்சு அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து க்யோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மூன்றாம் எண் உலையில் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரித்து எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 160 பேர் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு லட்சம் பேர் வெளியேற்றம்:இதைத் தொடர்ந்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தை ஒட்டி 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அனைவரும் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, கதிர்வீச்சினால் தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுற்றுவட்டார மக்களுக்கு ஐயோடின் சத்துப் பொருட்கள் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.நிலவரத்தை ஆராய்ந்து வரும், அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் கடந்த 1986ல் நடந்த செர்னோபிள் அணுமின் உலை விபத்து பாதிப்பைப் போல ஜப்பானிலும் ஏற்படக் கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
அணுமின் உலைகள் செயல்படுவது எப்படி?* ஒவ்வொரு அணுமின் உலையிலும், அணுக்கருப் பிளப்புக்கு முக்கியமான யுரேனியம் அல்லது புளூட்டோனியம் கம்பிகள் இருக்கும். இவை "கோர்' எனப்படும்.
* உலையின் மையப் பகுதியில் உள்ள நீரில் "கோர்' வைக்கப்பட்டிருக்கும். அணுக்கருப் பிளப்பைக் கட்டுக்குள் வைப்பதற்கு, போரான் அல்லது காட்மியம் ஆகியவை ஒரு ஒழுங்கில் வைக்கப்படும். இவை கட்டுப்பாட்டுக் கம்பிகள் எனப்படும்.
* மேலும் அணுக்கருப் பிளப்பு என்பது நடக்கும் போது ஏற்படும் உஷ்ணம் அளவு கடந்து இருக்கும். அது அந்த கலன்களுக்குள் இருந்து வெளியேறா வகையில் முதல் நிலைசுற்றுச் சுவர் இருக்கும்.
* இதையடுத்து, வெளியில் இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் கட்டப்பட்டிருக்கும்.
* நீராவிக் கொள்கலன், கண்டன்சர், டர்பைன், ஜெனரேட்டர், குளிரூட்டும் கோபுரம் ஆகியவை பிற முக்கிய கருவிகள்.
* அணுக்கருப் பிளப்பு மூலம் வெளிப்படும் அபார வெப்பத்தில் நீரைச் சூடாக்கி நீராவியாக்கி, அந்நீராவி மூலம் டர்பைன் இயக்கப்பட்டு, அதன் மூலம் ஜெனரேட்டரில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
* மின் தயாரிப்புக்கு ஆதாரமாகவும், உலையில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும் திரவமாகவும் நீரே பயன்படுத்தப்படும்.
* புக்குஷிமா முதல் உலை வெடிவிபத்தில், உலையில் வெப்பம் அதிகரித்து, வெளியேறி இரண்டாம் நிலை கொள்கலச் சுவர் உடைந்து விழுந்தது.
* உலையில் வெப்பம் அதிகரிக்குமானால், "கோர்' கம்பிகள் உருகி, அடிப்புறம் வழியாக பூமியில் பரவும்.
* இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் விதத்தில் தான், ஜப்பானில் அணு மின் உலைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* அணுஉலை இயக்கம் உடனடியாக நின்றுவிட்டாலும், அதன் உஷ்ண அளவைக் குறைப்பது அவ்வளவு சுலபமல்ல.
கதிர்வீச்சினால் என்ன அபாயம்? * காற்றில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதை குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அறிய முடியும்.
* அளவு, அபாய கட்டத்தை தாண்டும் போது, உடனடியாக மரணம் நிகழும்.
* நீண்ட கால அபாயமாக புற்றுநோய் உருவாகும்.
* உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்.
* குறிப்பாக, குழந்தைகளை கதிர்வீச்சு மிக அதிகளவில் பாதிக்கும். செர்னோபிள் அணு உலை விபத்தை அடுத்து அப்பகுதியில் வசித்த குழந்தைகள் தான், தைராய்டு புற்றுநோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது